சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்ற

பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது

ஐந்தாவது
வம்பறாவரிவண்டுச் சருக்கம்

ஏயர்கோன்கலிக்காமநாயனார் புராணம்

ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்
    ஏயர்கோன் கலிக்காமர் 'இறையை நேரே
தூதுகொளும் அவன் அணுகில் என்னாம்' என்னும்
    துணிவினர்பால் இறைவன் அருஞ் சூலைஏவி
'வேதனைவன் றொண்டன்வரின் நீங்கும்' என்ன
    வெகுண்டு உடல்வாள் கொடுதுறந்து மேய நாவாற்
போதகமும் உடல்இகழ எழுந்துதாழ்ந்து
    போற்றியது விலக்கியருள் பொருந்தி னாரே.

    சோழநாட்டிலே, திருப்பெருமங்கலத்திலே, வேளாளர் குலத்திலே, சோழராஜாக்களிடத்திலே பரம்பரையாகச் சேனாதிபதித் தொழில்பூண்ட ஏயர்குடியிலே, கலிக்காமநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.  அவர் குருலிங்க சங்கமபத்தியிலே சிறந்தவர்.  திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்திலே அளவில்லாத திருப்பணிகள் செய்தவர்.

    அவர் சுந்தரமூர்த்திநாயனார் சிவபெருமானைப் பரவையாரிடத்திற்குத் தூதாக அனுப்பிய சமாசாரத்தைக் கேள்வியுற்று, வெம்பி மிகக் கோபித்து, "நாயனை அடியான் ஏவுங் காரியம் மிகநன்று.  இப்படிச் செய்பவன் தொண்டனாம்! இது என்ன பாவம்! பொறுக்கவொண்ணாத இந்தப் பெரும் பாதகத்தைக் கேட்டும் உயிரோடிருக்கிறேனே" என்றார்.  "ஒருவன் பெண்ணாசைமேலீட்டினால் ஏவ ஒப்பில்லாத கடவுள் தூதராய் ஓரிரவு முழுதும் போக்கு வரவு செய்து உழன்றாராம்.  அரிபிரமேந்திராதி தேவர்களாலும் அறியப்படாத கடவுள் இசைந்தாராயினும், அவன் அவரை ஏவலாமா? இதற்கு மனநடுங்காத அந்தத் துரோகியை நான் காணு நாள் எந்நாளோ! பெண்பொருட்டுக் கடவுளை இரவிலே தூதனுப்பிய பாதகனைக் காண்பேனாயின் யாது சம்பவிக்குமோ" என்று சொல்லி மிகச் செற்றங் கொண்டிருந்தார்.

    சுந்தரமூர்த்திநாயனார் அதனைக் கேள்வியுற்று அடியார்க் கெளியாராகிய பரமசிவனுக்கு விண்ணப்பஞ்செய்ய; பரமசிவன் இருவரையும் கூட்டுதற்குத் திருவுளங்கொண்டு, கலிக்காம நாயனாரிடத்திலே சூலைநோயை ஏவ; அது அக்கினியிலே காய்ச்சப்பட்ட வேல்குடைதல்போல மிக்கவேதனை செய்ய; கலிக்காமநாயனார் அதனால் மிகவருந்தி வீழ்ந்து, உயிர்த்துணையாகிய பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்துத் துதித்தார்.  அப்பொழுது பரமசிவன் அவரிடத்தில் எழுந்தருளி, "சுந்தரனாலன்றி இந்நோய் தீராது" என்று அருளிச்செய்ய; அவர் "எம்பெருமானே! பரம்பரையாகத் தேவரீரே மெய்க்கடவுளென்று துணிந்து தேவரீருக்குத் திருத்தொண்டுகள் செய்து வருகின்ற குடியிலுள்ளேனாகிய என்னை வருத்துகின்ற சூலைநோயை, நூதனமாக ஆண்டுகொள்ளப்பட்ட ஒருவனா வந்து தீர்ப்பான்.  அவனாலே தீர்க்கப்படுதலிலும் தீராதொழிந்து என்னை வருத்துதலே நன்று.  தேவரீர் செய்யும் பெருமையை அறிந்தவர் யாவர்! வன்றொண்டனுக்கு ஆகும் உறுதியையே செய்யும்" என்றார்.  உடனே பரமசிவன் அவர்முன்னே மறைந்து, "சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற்சென்று, "நம்முடைய ஏவலாலே கலிக்காமனை வருத்துகின்ற சூலையை நீ போய் தீர்ப்பாய்" என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அதைக் கேட்டு திருவுள மகிழ்ந்து, கலிக்காமநாயனாரிடத்திற்குப் போம்படி தீர்ப்பாய்" என்றார்.  உடனே பரமசிவன் அவர்முன்னே மறைந்து, சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற்சென்று, "நம்முடைய ஏவலாலே கலிக்காமனை வருத்துகின்ற சூலையை நீ போய்த் தீர்ப்பாய்" என்றார்.  சுந்தரமூர்த்திநாயனார் அதைக்கேட்டு திருவுள மகிழ்ந்து, கலிக்காமநாயனாரிடத்திற்குப் போம்படி புறப்பட்டு, சூலை தீர்க்கும்படி தாம் வருஞ் சமாசாரத்தை அவருக்குத் தெரிவித்தற்கு முன்னே ஆள் அனுப்பினார்.  அவ்வாளினாலே சுந்தரமூர்த்திநாயனாருடைய வரவை அறிந்த கலிக்காமநாயனார் "எம்பெருமானைத் தூதனுப்பியவன் சூலை நோய் தீர்த்தற்கு வந்தால் நான் செய்வது என்னாம்! அவன் இங்கே வந்து தீர்த்தற்கு முன்னே இச்சூலையை வயிற்றினோடுங் கிழிப்பேன்" என்று உடைவாளினாலே தம் வயிற்றைக் கிழித்துக்கொண்டு இறந்துபோனார்.  அது கண்ட அவர் மனைவியாரும் அநுமரணஞ்செய்யப் புகுந்தார்.  அப்போது 'சுந்தரமூர்த்திநாயனார் சமீபத்தில் எழுந்தருளி வந்துவிட்டார்" என்று முன் வந்தோர் சொல்ல; மனைவியார் "ஒருவரும் அழாதொழிக" என்று சொல்லி, பின்பு தம்முடைய நாயகரது செய்கையை மறைத்து, சுந்தரமூர்த்தி நாயனாரை எதிர்கொள்ளும் பொருட்டுத் தங்கள் சுற்றத்தார்களை ஏவ; அவர்கள் போய் எதிர்கொண்டு வணங்கினார்கள்.

    சுந்தரமூர்த்திநாயனார் அவர்களுக்கு அருள்செய்து வந்து, கலிக்காமநாயனார் வீட்டிற்புகுந்து, ஆசனத்தில் எழுந்தருளியிருந்து, தமக்குச் செய்யப்பட்ட அருச்சனைகளை ஏற்றுக் கொண்டு, "கலிக்காமநாயனாருடைய சூலையை நீக்கி அவருடன் இருத்தற்கு மிக வருந்துகின்றேன்" என்றார்.  அப்பொழுது மனைவியாரது ஏவலால் வீட்டுவேலைக்காரர் வணங்கி, நின்று, "சுவாமீ! அவருக்குத் தீங்கு ஒன்றும் இல்லை உள்ளே பள்ளி கொள்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்ய; "சுந்தரமூர்த்திநாயனார் தீங்கும் ஒன்றும் இல்லை என்றீர் ஆயினும், என் மனந்தெளிந்திலது.  ஆதலால் அவரை நான் காணல் வேண்டும்" என்றார்.  அவர்கள் அது கேட்டு, கலிக்காம நாயனாரைக்காட்ட, சுந்தரமூர்த்திநாயனார் இரத்தஞ் சோரக் குடர் சொரிந்து உயிர் பொன்றிக் கிடந்தவரைக் க்ண்டு "புகுந்தவாறு ந்னறு.  நானும் இவர்போல இறந்து போவேன்" என்று சொல்லி உடைவாளை எடுத்தார்.  உடனே பரமசிவனது திருவருளினால் கலிக்காமநாயனார் உயிர்த்து எழுந்து அவர்கையில் வாளைப் பிடித்துக்கொள்ள; அவர் விழுந்து நமஸ்கரித்தார்.  கலிக்காமநாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரை நமஸ்கரித்தார்.

    அதன்பின் இருவரும் அதிக நண்புள்ளவர்களாகித் திருப்புன்கூருக்குப் போய் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு, சிலநாட் சென்றபின்பு, திருவாரூரை அடைந்தார்கள்.  கலிக்காமநாயனார் சிலநாள் அங்கே சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்து, பின்பு சுந்தரமூர்த்திநாயனாரிடத்தில் அநுமதி பெற்றுகொண்டு, தம்முடைய ஊருக்குத் திரும்பிவந்து, திருத்தொண்டு செய்து கொண்டிருந்து, சிவபதம் அடைந்தார்.

   

       ¾¢ÕüÈõÀÄõ