சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்ற

பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது

எட்டாவது
கறைக்கண்டன் சருக்கம்

கணம்புல்லநாயனார் புராணம்

இலகுவட வெள்ளாற்றுத் தென்பால் வாழு
    மிருக்குவே ளூரதிப ரெழிலார் சென்னிக்
கலைநிலவா ரடிபரவுங் கணம்புல்லர் தில்லைக்
    கருதுபுலீச் சரத்தாற்குக் காதற் றீப
நிலைதரத்தா மிடமிடியா லொருநாட் புல்லா
    னீடுவிளக் கிடவதுவு நேரா தாகத்
தலைமயிரி னெரிகொளுவு மளவி னாதன்
    றாவாத வாழ்வருளுந் தன்மை யாரே.

    டவெள்ளாற்றுக்குத் தென்கரையில் உள்ள இருக்கு வேளூரிலே, சிவபத்தியிற் சிறந்தவரும் பெருஞ்செல்வருமாகிய ஒருவர் இருந்தார்.  அவர் செல்வம் பெற்றதினால் அடையும் பயன் இதுவே என்று, சிவாலயத்தினுள்ளே திருவிளக்கேற்றித் தோத்திரம் பண்ணுவாராயினார்.  நெடுங்காலஞ்சென்றபின், வறுமைஎய்தி, சிதம்பரத்தை அடைந்து சபாநாயகரைத் தரிசனஞ் செய்துகொண்டு, தம்முடைய வீட்டில் உள்ள பொருள்களை விற்று, அங்குள்ள திருப்புலிச் சரமென்னும் ஆலயத்திலே திருவிளக்கேற்றி வந்தார்.

    இப்படி யொழுகுநாளிலே, வீட்டுப்பொருள்களும் ஒழிந்து விட, கணம்புல்லுக்களை அரிந்துகொண்டுவந்து விற்று, நெய் வாங்கித் திருவிளக்கெரித்தார்.  அதனால் அவருக்குக் கணம்புல்லநாயனார் என்னும் பெயர் உண்டாயிற்று.  ஒருநாள் தாம் அரிந்து கொண்டு வந்த புல்லு விலைப் படாதொழியவும், தம்முடைய பணி தவறாமல் அப்புல்லையே மாட்டி விளக்கெரித்தார்.  முன்பு விளக்கெரிக்கும் யாமம் வரையும் எரித்தற்கு அப்புல்லுப் போதாமையால், அடுத்த விளக்கிலே தம்முடைய திருமுடியை மடுத்து எரித்தார்.  அப்பொழுது பரமசிவன் பெருங்கருணை செய்தருள, கணம்புல்லநாயனார் சிவலோகத்தை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்