உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்ற

பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது

ஆறாவது
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்

கூற்றுவநாயனார் புராணம்

குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்
    கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப்
பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும்
    பூசுரர்கள் கொடாதகலப் புனித னீந்த
மன்றாடுந் திருவடியே முடியாச் சூடி
    மாநிலங்காத் திறைவனுறை மாடக் கோயில்
சென்றாசை யுடன்வணங்கிப் பணிகள் செய்து
    திருவருளா லமருலகஞ் சேர்ந்து ளாரே.

    ளந்தையென்னும் பதியிலே, குறுநிலமன்னர் குலத்திலே, கூற்றுவநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார்.  அவர் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை விதிப்படி உச்சரிப்பவர்.  சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்பவர்.  அவர் திருவருள் வலியினாலே பெருஞ்செலவமுடையராகி, கச ரத துரக பதாதியென்னுஞ் சதுரங்கங்கள் நிறைந்த வீரச்செருக்கில் மேலாயினார்.  பலவரசர்களோடு யுத்தஞ்செய்து, அவர்களை வென்று அவர்களுடைய நாடுகளெல்லாற்றையுங் கவர்ந்து அரசர் திருவில் முடி ஒன்று தவிர மற்றவைகளெல்லாவற்றையும் உடையராயினார்.  உலகத்தை ஆளுதற்குத் தமக்கு முடிசூட்டும் பொருட்டுத் தில்லைவாழந்தணர்களை வேண்ட; அவர்கள் "நாங்கள் சோழகுலத்தாருக்கேயன்றி மற்றவர்களுக்கு முடிசூட்டோம்" என்று மறுத்து, தங்களுக்குள் ஒரு குடியை முடியைக் காத்துக்கொள்ளும்படி இருத்தி, சேரமண்டலத்துக்குப் போயினார்கள்.

    கூற்றுவநாயனார் ஐயுறவினாலேவனந் தளர்ந்து, சபாநாயகரைப் பணிந்து அற்றைநாள் இரவிலே "எம்பெருமானே! அடியேனுக்குத் திருவடியையே முடியாகத் தந்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டு நித்திரை செய்ய; சபாநாயகர் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி தம்முடைய திருவடிகளை முடியாகச் சூட்டியருளினார்; கூற்றுவநாயனார் அவைகளையே முடியாகச் சூடி, பூமி முழுதையும், பொதுநீக்கி ஆண்டார்.  சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற முக்கிய ஸ்தலங்களெங்குஞ் சென்று வணங்கி, திருப்பணிகள் செய்து, சிவபதம் அடைந்தார்.

   

 

திருச்சிற்றம்பலம்.

வார்கொண்டவனமுலையாள் சருக்கம்
முற்றுப்பெற்றது