சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்ற

பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது

பதினொராவது
மன்னியசீர்ச் சருக்கம்

நேசநாயனார் புராணம்

சாலியர்கோக் காம்பீலித் தலைவர் மேன்மை
    தாவாத புகழ்நேசர் தஞ்சொ லென்றுங்
கோலியவைந் தெழுத்தோதிச் சிந்தை யுன்னிக்
    கொண்டபொரு ளன்பர்கொளக் கொடுத்து வாழ்வார்
சீலமிகுந் திருத்தொண்டர்க் குடையுங் கீளுந்
    திருந்தியவொண் கோவணமுஞ் சேர வீந்து
பாலனைய வொளிநீற்றான் பாத மேத்திப்
    பரலோக முழுதாண்ட பான்மை யாரே.

    காம்பீலிநகரத்திலே, சாலியர் குலத்துக்குத் தலைவராகிய நேசநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார்.  அவர் தம்முடைய மனத்தின் செய்கையைப் பரமசிவனுடைய திருவடிக்கு ஆக்கி, வாக்கின் செய்கையை ஸ்ரீ பஞ்சாக்ஷரத்துக்கு ஆக்கி, கையின் செய்கையைச் சிவனடியார்களுக்கு ஆக்குவாராகி, வஸ்திரமுங் கீளுங் கோவணமும் நெய்து, தம்மிடத்தில் வருஞ் சிவனடியார்களுக்கு இடையறாது கொடுத்து நாடோறும் அவர்களை வணங்கித் துதித்துக் கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்.

    ¾¢ÕüÈõÀÄõ