சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்ற

பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது

பதினொராவது
மன்னியசீர்ச் சருக்கம்

திருநீலகண்டயாழ்ப்பாணநாயனார் புராணம்

பிறங்கெருக்கத் தம்புலியூர் வாழும் பேரியாழ்
    பேணுதிரு நீலகண்டப் பெரும்பாண னார்சீர்
நிறந்தருசெம் பொற்பலகை யால வாயி
    னிமலன்பாற் பெற்றாரூர் நேர்ந்துசிவன் வாயி
றிறந்தருளும் வடதிசையே சேர்ந்து போற்றித்
    திருஞான சம்பந்தர் திருத்தாள் வாழ்த்தி
யறந்திகழுந் திருப்பதிகம் யாழி லேற்றி
    யாசிறிருப் பெருமணஞ்சேர்ந் தருள்பெற் றாரே.

    டுநாட்டிலே திருவெருக்கத்தம்புலியூரிலே திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார்.  அவர் பரமசிவனுடைய திருப்புகழை யாழில் இட்டுப்பாடுவாராகி, சோழநாட்டில் உள்ள சிவஸ்தலங்களை வணங்கிக் கொண்டு சென்று, பாண்டிநாட்டிற் சேர்ந்து, மதுரையில் இருக்கின்ற சொக்கநாத சுவாமியினுடைய திருக்கோயில் வாயிலை அடைந்து நின்று, பரமசிவன் மேலனவாகிய பாணிகளை யாழில் இட்டு வாசித்தார்.  சொக்கநாத சுவாமி அதனைத் திருவுள்ளத்துக் கொண்டு அன்றிரவிலே தம்முடைய அடியார்களெல்லாருக்கும் சொப்பனத்திலே தோன்றி ஆஞ்ஞாபிக்க, அவர்கள் மற்றநாள் திருநீலகண்டப் பெரும்பாணரைச் சுவாமிக்குத் திருமுன்பே கொண்டுவந்தார்கள்.  திருநீலகண்டப் பெரும்பாணர் அது சுவாமியுடைய ஆஞ்ஞை என்று தெளிந்து, திருமுன்பே இருந்து யாழ் வாசித்தார்.  அப்பொழுது "இந்தப் பாணர் அன்பினோடு பாடுகின்ற யாழ் பூமியிலே உள்ள சீதம் தாக்கினால் வீக்கு அழியும்.  ஆதலால் இவருக்குப் பொற்பலகை இடுங்கள்' , என்று ஆகாயத்தினின்றும் ஓரசரீரிவாக்கு எழுந்தது.  அதைக் கேட்ட அடியார்கள் பொற்பலகையை இட, திருநீலகண்டப் பெரும்பாணர் அதில் ஏறி, யாழ் வாசித்தார்.

    பின்பு பல தலங்களையும் வணங்கிக்கொண்டு, திருவாரூரிற் சேர்ந்து, திருக்கோயில்வாயிலை அடைந்து, யாழ் வாசிக்க பரமசிவன் வடதிசையிலே ஒரு திருவாயில் வகுக்க; திருநீலகண்டப் பெரும்பாணர் அதன் வழியாகப் புகுந்து, திருமூலட்டானப் பெருமானாகிய வன்மீகநாதரை வணங்கினார்.  நெடுநாளாயினபின், அவ்விடத்தினின்றும் நீங்கி, சீர்காழியை அடைந்து, சமயகுரவராகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனாருடைய திருவடிகளை வழிபட்டு, அவரை ஒருபொழுதும் பிரியாது.  அவர் பாடியருளுந் திருப்பதிகங்களை யாழில் இட்டு வாசிக்கும் பெரும்பேற்றைப் பெற்று, திருநல்லூர்ப் பெருமணத்திலே அவருடனே சிவபதத்தை அடைந்தார்.

 

    ¾¢ÕüÈõÀÄõ